தெருவிளக்கு!!!
எட்டா உயரம் எனது, என
உரிமை கொண்டாட்டமும் அல்ல,
"தனது" என்ற அரவணைப்பும் அல்லாது,
வான் நின்று பார்க்கும் உயரத்தில்,
காகம், குருவி, பட்டாம்பூச்சிகள்,
மின்மினிப் பூச்சிகள், சிறு தும்பிகள்,
சில நேரம் கழுகுகளும் கூட
இளைப்பாறிவிட்டுச் செல்ல,
மாரி பொழிய,
சிறு இடி ஓரிரு இடங்களைத் தாக்க,
மின்னல்கள் பாய்ந்து செல்ல,
ஒளி மாறா வீசி
ஓங்கி நிற்க,
இரவில் மட்டும்
நினைவில் வர.
நட்சத்திரம் தொட ஆசை —
கூரை தடையாய்.
நிலவின் நிகர் ஒளி அளிக்க ஆசை —
வீட்டின் நான்கு சுவர்களின்
நள்ளிரவு இருள் தடையாய்.
சுதந்திரக் காற்று வாங்க ஆசை —
வேலி தடையாய்.
சற்றே கீழே அகல்விளக்கு ஒன்று,
தன் சுற்றம் ஒளி பரப்பிக்கொண்டு,
காற்றில் போராடி ஆடிக்கொண்டே,
மங்கிய ஒளியில்
நிழல் ஆடி அசைய,
மனைவி மறைந்து நிற்க,
வீட்டின் ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்க,
நின்றாள் மாதவி
தெருவிளக்கு நிழலில்!
-- கீர்த்தி திருநாவுக்கரசு
குறிப்பு :
அகல்விளக்கு → இல்லறத்தைத் தேர்ந்தெடுத்த பெண். வீட்டுக்குள், தன் குடும்பத்திற்குள் ஒளி தருபவள்.
தெருவிளக்கு → அந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காத பெண். எல்லோருக்கும் தெரியும்; ஆனால் யாருக்கும் சொந்தமில்லை.
மாதவி → சமூகத்தின் பார்வையில், அவளை ஒரு முழுமையான மனிதராகப் பார்க்காமல், வெறும் பொழுதுபோக்காக அல்லது பயன்படுத்தப்படும் ஒருவராகப் பார்ப்பதற்கான குறியீடு.
பூச்சி, பறவை - சந்திக்கும் மனிதர்கள்.
இக்கவிதையில் வரும் "அகல்விளக்கு", "தெருவிளக்கு", "மாதவி" ஆகியவை உருவகங்கள் மட்டுமே. அவற்றை நேரடிப் பொருளில் வாசிக்காமல், சமூகப் பார்வையின் குறியீடுகளாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கவிதையின் வெளிச்சங்கள், வெளிச்சங்களைப் பற்றி மட்டுமல்ல.
சில விளக்குகள் ஒளியை மட்டும் அல்ல; சமூகத்தின் பார்வையையும் சுமக்கின்றன.
நன்றி ❤️

Comments
Post a Comment